Saturday, February 2, 2019

சின்னத்தம்பியும் விநாயகனும்


தற்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை சின்னத்தம்பி யானைதான்.  சின்னத்தம்பி யானை பற்றி சிறு அறிமுகமாக பார்ப்போம். கோவையில் பெரிய தடாகம் பகுதியில் நேற்றோ அல்லது இன்றோ புதிதாக வந்த காட்டு யானை அல்ல சின்னத்தம்பி கடந்த 18 வருடங்களாக சின்னத்தம்பியும் அ்தன் சகோதரனும் ஆன விநாயகனும் பாதுகாத்து வந்த வனப்பகுதி தான் இந்த இடம்.
காடுகளில் இவைகள் உண்ணும் மூங்கில்களும் இலைகளும் பழங்களும் போதிய அளவு தண்ணீரும் கிடைக்காத பட்சத்தில் தான் இவை ஊருக்குள் உணவைத் தேடி வருகின்றன. ஆச்சர்யம் என்னவெனில் கடந்த 18 ஆண்டுகளில் ஒருவரைக்கூட இந்த இரண்டு யானைகளும் காயப்படுத்தியதில்லை என்பதுதான். அவ்வாறு மனிதனோடு ஒன்றி வாழ கற்றுக் கொண்ட இந்த யானைகளுக்கு மனிதனாலேயே தான் ஆபத்து நேரிடும் என நினைத்திருக்காது. முதலில் இதனது சகோதர யானையான விநாயகனை பிடித்து முதுமலை காட்டிற்கு அனுப்பி உள்ளனர் வனத்துறையினர். அங்கு சகோதரனை பிரிந்த துக்கத்தில் உணவருந்தாது இருக்கிறது விநாயகன். சில வாரங்கள் கழித்து இந்த சின்னத் தம்பியை கும்கி வைத்து கொடுமைப்படுத்தி அதன் தந்தத்தை உடைத்து ரத்த காயங்களுடன் பிடித்து சென்றிருக்கின்றனர்.

அதன் இனமான யானையை (கும்கியை) வைத்தே அதனை கொடுமைப்படுத்தும் கலையை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். மக்களின் கோரிக்கை வலுத்து  காட்டிற்குள் விட வற்புறுத்திய பிறகு பிடித்து சென்ற யானையை டாப்ஸ்லிப் பகுதியில் கொண்டு சென்று விட்டிருக்கின்றனர். ஆனால் தன் உறவுகளை தேடி மறுபடியும்  சின்ன தம்பி பல கிலோமீட்டர்கள் நடந்து சோர்வுற்று இன்னமும் தன் உறவுகளை தேடி கொண்டு தான் இருக்கின்றது.யானைகள் தன்னுடைய தாய் பாசத்திலும் சகோதர பாசத்திலும் பிள்ளை பாசத்திலும் மனிதனை விட மேலானவை அவைகள் ஒன்று கூடி வாழும் இயல்பு கொண்டவை தனித்துவிடப்பட்ட இந்த யானை தன் உறவுகளை தேடுகிறது.
மனிதனால் காயங்களும் வேதனைகளும் ஏற்பட்ட பிறகு யானை மூர்க்கமாக நடந்து கொள்ளும் என எண்ணியவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சின்னத்தம்பி. தன்னுடைய அமைதியான வழியில் மக்களை பயமுறுத்தாமல் இயல்பாக தன் கால் போன போக்கில் உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்தை விட்டு பிரித்த சோகத்துடனேயே காணப்படுகிறது. காடுகளில் மனிதனின் ஆக்கிரமிப்பும் அவைகள் வாழ்ந்த இடங்களில் சொகுசு பங்களாக்களை கட்டுவதும் மலைகளை குவாரிகளாக மாற்றி வெடி வைப்பதால் பயந்து ஓடி வரும் இந்த அப்பாவி யானை கூட்டங்கள் வயல்களில் வைக்கும் மின்சார வேலிகளிலும் ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருக்கிறது. இந்த யானைகள்தான் காடுகளில் வளர்ச்சிக்கும் கட்டமைப்பிற்கும் பெரும்பங்காற்றும் காட்டு ராஜாக்கள். காட்டிற்குள் அமைத்துள்ள தண்ணீர் தொட்டிகளில் சரிவர தண்ணீரை நிரப்பி  மூங்கில் மரங்களையும் வளர்த்து அவைகளுக்கான உணவுக்கு வனத்துறையினர் வழி செய்தால்  இவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை தவிர்க்கலாம். இந்த உலகம் மனிதன் மட்டும் வாழ உண்டாகவில்லை என்பதுதான் உண்மை இந்த விலங்குகளும் வாழ சம உரிமை பெற்றவை தான் அவைகளுக்கான வாழ்விடத்தை அவைகளுக்கே விட்டுக் கொடுப்பது தான் நியாயமும் கூட. இந்த சின்னத் தம்பியை கும்கியாக மாற்றாமல் அதனது சகோதர யானையான விநாயகன் உடன் சேர்த்து வைத்து காட்டிற்குள் விட வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கருத்தும் நம்மில் பலரது வேண்டுகோளும் ஆகும்...

Thursday, December 20, 2018

வாழும் ஷாஜகான்



   அது என்ன வாழும் ஷாஜகான் என நினைக்கலாம். நமக்கு தெரிந்த  உலக அதிசயங்களுள் ஒன்றான, முகலாய பேரரசர் ஷாஜகானால் தன் மனைவி மும்தாஜ் காக கட்டப்பட்ட ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் தான். இந்த தாஜ்மஹாலை கட்டும்போது நம்மில் யாருமே பிறந்திருக்கவில்லை. ஆனால்,நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலும் ஒருவர் தன் மனைவிக்காக தாஜ்மஹாலை கட்டிக் கொண்டிருக்கிறார்.
     
ஃபைசல் உசேன் கத்ரி எனும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 80 வயது முதியவர் தான் அவர். தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தன்னுடைய மனைவி தஜா முள்ளி பேகம் நினைவாக ஒரு தாஜ்மஹாலை கட்டி வருகிறார். உசேனுக்கும் தஜா முள்ளி பேகத்திற்கும் 1953இல் திருமணமானது. மனைவி இவரிடம் நமக்குதான் பிள்ளைகள் இல்லையே நாம் இறந்த பிறகு நம்மை யார் நினைவு கொள்வார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு இவர் எனக்கு முன் நீ இறந்துவிட்டால் உன்னுடைய நினைவாக நான் ஒரு தாஜ்மஹாலை கட்டுவேன் என வாக்களித்திருக்கிறார். சில வருடங்களுக்கு பின்னர் 2011இல் பேகம் இறந்துவிடுகிறார். அவர் இறந்த பிறகு மனைவியின் நினைவாக தன் வாழ்நாள் முழுவதும் சிறிது சிறிதாக சேர்த்த அனைத்து சேமிப்புகளையும் சேர்த்து தன் மனைவிக்காக ஒரு சிறிய தாஜ்மஹால் ஒன்றை 3  ஆண்டுகளாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மகாலை கான்கிரீட்டால் உறுதியாக கட்டியிருக்கிறார் இதனை சுற்றி இருக்கும் நான்கு தூண்களின் உயரம் 27 அடி. மனைவியின் கல்லறையின் அருகே தனக்கென ஒரு சிறிய இடமும் தான் இறந்த பிறகு புதைப்பதற்காக அமைத்திருக்கிறார்.
இந்த தாஜ்மகாலை சுற்றி அழகிய சிறிய தோட்டமும் மார்பிள் தரையும் போட திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இதுவரை 11 லட்சங்களை செலவு செய்த பிறகு இந்த மாற்றங்களை செய்ய போதிய பணவசதி இல்லாததால் பணிகளை நிறுத்தி வைத்துள்ளார் இவருக்கு இவரது மனைவியின் மீது உள்ள அன்பை கண்டு வியந்து இந்த தாஜ்மஹாலை கட்ட பண வசதி செய்ய பல பணக்காரர்களும், ஊர்மக்களும் ஏன் அந்த மாநிலத்தின் முதல்வரே முன்வந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இது என் மனைவிக்காக நான் கட்டும் நினைவிடம் இதனை என் முழு முயற்சியின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டே கட்டுவேன் என்று சபதம் செய்திருக்கிறார் இந்த முதியவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அகிலேஷ்யாதவ் இவரை அழைத்து இவரது முயற்சியை பாராட்டி இருக்கிறார் . தானும் இந்த தாஜ்மஹால் முழுமையாக்கி விட்ட பிறகு பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஒரு பேரரசர் ஆன ஷாஜகானிடம் தாஜ்மஹாலை கட்ட அவரிடம் பண பலமும் ஆள் பலமும் நிறையவே இருந்திருக்கும். ஆனால், ஒரு சாதாரண தனி மனிதன் தன் முழு முயற்சியில் மட்டுமே இந்த தாஜ்மஹாலை கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம்தான். இந்த  வாழும் ஷாஜகானை பார்க்க பல ஊரிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் இந்த தாஜ்மஹால் இவர்களது அன்பையும் காதலையும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.

Monday, December 3, 2018

பாலைவனத்தில் ஒரு சோலை

உமைத் பவன்(umaidh bhawan)
               
                 
உலகிலேயே விலை உயர்ந்த மற்றும் மிகப்பெரிய ஹோட்டல் நம்மூரில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா?ஆம்! உமைத் பவன் எனும் இந்த அரண்மனை அதாவது தற்போது ஹோட்டல் 2016 இல் உலகின் விலை உயர்ந்த ஹோட்டல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த அழகிய அரண்மனை காணப்படுகிறது. இந்த அரண்மனை அதனை உருவாக்கிய உமைத் சிங் என்ற ராஜாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த அழகிய அரண்மனை சித்தார் மலைமீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் கூறுகின்றனர். இந்த அரண்மனை art techo பாணியில் 1928 தொடங்கி 1940 இல் முடித்தனர். இந்த ஹோட்டலை அதாவது அரண்மனையை வடிவமைத்தவர் ஹென்றி எனும் ஆங்கிலேய வடிவமைப்பாளர்(builder). இவர்தான் நம் நாட்டின் குடியரசுத் தலைவரின் மாளிகையை வடிவமைத்தவர். இந்த அரண்மனையின் சிறப்பு அம்சம் என்னவெனில் கற்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு சுண்ணாம்பு கலவை பூசாமலே கட்டப்பட்டுள்ளது.
             
 இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளையும் நம் நாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும்(hotel) ,மற்றொரு பகுதி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அருங்காட்சியகமாகவும்(museum) செயல்படுகிறது. இந்த ஹோட்டலில் 347 அறைகளும் அரச பரம்பரை தங்குவதற்காக தனி இடமும் இருக்கிறது. இந்த அரண்மனை 26 ஏக்கரில் வண்ண பூந்தோட்டங்கள் உடனும் காட்டு மயில் களுடனும் மிகப்பெரிய நீச்சல் குளத்துடனும் கண்களை  கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.        

  இந்த  அரண்மனையில் ஒரு நாள் தங்குவதற்கு ஒரு அறைக்கு 1,50,000₹ வசூலிக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்கு செல்லும் ஒவ்வொரு விருந்தினரும் மேளதாளத்துடன் மாலை அணிவித்து திலகமிட்டு வரவேற்கின்றனர் ஒவ்வொரு பயணியும் தன்னை ஒரு மகாராஜாவாக பாவித்துக் கொள்ளும் அளவிற்கு உபசரிப்புகள் பலமாகவும் ராஜஸ்தானின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடனத்துடனும் வரவேற்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற உலக அழகியான பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ்(nick jonas) திருமணம் இங்குதான் நடைபெற்றது. இந்தியாவின் பழமையான பழமொழியான அதிதி தேவோ பவோ( விருந்தினர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்) என்பதன் அர்த்தத்தை இங்கே காணலாம். ராஜஸ்தான் ஒரு பாலைவன பூமி மட்டுமல்ல அது பல அரண்மனைகளையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அழகிய இடமுமாகும்.

Friday, November 30, 2018

புவி வெப்பமயமாதல்

புவிவெப்பமயமாதல் 
                       
                   இந்த வார்த்தை நம் பள்ளி காலங்களில் கேள்வி பட்ட மாதிரி இருக்கே என  தோன்றலாம். பள்ளியில் படிக்கும்போது மட்டுமல்ல இப்போதும் நாம் இந்த பூமியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் பூமி வெப்பமயமாதல் என்றாள் என்ன என்பதை பார்ப்போம். நிறைய தொழிற்சாலைகளின் புகைகளும், வாகன புகைகளும், காடுகளின் விரிவாக்கம் இல்லாமல் குறைந்து கொண்டே செல்வதும் கார்பன் டை ஆக்சைடு  அதிகரிப்பு  என பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தேவைதானே என்று நினைக்கலாம் தேவைதான். ஆனால் அவற்றின் மாசுகளையும் கழிவையும் சரிவர சுத்திகரிக்காமல் விடுவதும் பல மரங்களை வெட்டுவதும் தான் காரணம். சமீபத்திய ஆராய்ச்சியில் 150 வருடங்களுக்கு முன் 14 சென்டிகிரேட் இருந்த சராசரி வெப்பம் தற்போது 15 சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது 16 தொடும் போது பல  விபரீதங்கள் ஏற்படும்.
இந்த மாறுதலால் தான் வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் பெய்கிறது. உதாரணம் சென்னையின் 2015 பெருவெள்ளம் .நம் ஊரில் மட்டுமல்ல பல நாடுகளில் இவ்வாறு பெய்கிறது. புயல்களின் தாக்கம் அதிகரிக்கிறது. நம் ஊரில் கஜா புயலும், அதைவிட பெரிய சூறாவளி புயல் பிலிப்பைன்சில் சூப்பர் டைபூன் தாக்கியிருக்கிறது. இந்த புயல்களினால் மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் இயற்கையான மரங்களையும் பாதிக்கிறது. பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. வரும் வருடங்களில் 2030க்குள் இந்த பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நாடுகளும் முடிவு எடுத்துள்ளன. நாமும் நம்மால்  இயன்ற அளவு பங்களிக்க வேண்டும்.
நம்  முற்கால அரசனான பாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்கு தீர்வானது ஒரு குறிப்பிட்ட மரத்தினை வெட்டி அதன் நடுவில் இருக்கும் பகுதியை காய்ச்சி குடித்தாள் சரியாகும் என வைத்தியர் கூறினார். அதற்கு பாரி மன்னன் ஒரு மரத்தின் இலை வைத்து குணமாக்கினாள் ஆக்குங்கள் அல்லது ஒரு மரத்தின் கிளை வைத்து குணமாக்கினாள்  என்னை குணமாக்குங்கள். அதைவிடுத்து ஒரு மரத்தை முழுமையாக  அழித்துதான் நான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதற்கு நான் செத்து அந்த மரம் உயிர் வாழட்டும் என்று கூறினார். இந்த நிகழ்வானது  நம் முன்னோர்கள்  இயற்கையின் மீது எவ்வளவு அன்புடன் இருந்தார்கள் என்பது புரிகிறது . நாம் ஒரு மரத்தை வெட்டும் சூழல் ஏற்பட்டால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நடவேண்டும். விதைப்பந்து விதை+ உரம்+ மண் சேர்ந்த பந்தினை தூவவேண்டும். ஆலைகளின் சுத்திகரிப்பு சரிவர நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். நம் வீட்டில்  உபயோகிக்கும் வாகனங்கள் அதிகப்படியான புகையினை வெளியிடுகிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். நாமே இவ்வளவு விளைவுகளையும் பருவநிலை மாற்றங்களையும் சந்தித்தால் நமக்கு பின்வரும் சந்ததியின் நிலை குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்படுவோம்.

Wednesday, November 21, 2018

வீராங்கனை

             
 நண்பர்களே இது என் முதல் பதிவு.என் முதல் பதிவில் பெண்மையின் பெருமை பற்றி பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி 😊.
அந்த காலத்தில் பெண் ராணிகள் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் குதிரை
 மீது ஏறி வாள் ஏந்தி போர் புரிந்ததை பேசி வியந்து இருக்கிறோம்...
இக்காலத்தில் நம்மிடையே வாழும் பல பெண்களில் ஒரு பெண்ணின் சவால் மிகுந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்... இவர் செய்யும் வேலை மட்டும் அல்ல. வேலை செய்யும் இடமே சவால் நிறைந்ததுதான்...                               

டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி ட்ரான்ஸ்போர்ட்டில் டிரக்(truck) பழுது பார்க்கும் வேலை செய்யும் முதல் இந்தியா பெண் இவர் தான்...சாந்தி தேவி எனும் இவர் 58 வயதில் டிரக் மெக்கானிக் வேலை செய்கிறார்...
ஆட்டோ டிரைவிங் ,தையல் வேலைகள் செய்து சரி வராததால் தன் கணவருடன் சேர்ந்து மெக்கானிக் கடை வைக்கிறார்.
கணவரின் உதவையாளராக இருந்து பின் தனியாகவே இதை செய்யும் அளவு முன்னேறி இருக்கிறார்.ஒரு டயர் எடை 50kg .இவரது தொழில் நேர்த்தியை கண்டு பல டிரக் ட்ரைவர்கள் இவரையே தேடி வருகின்றனர் ..பல கல்லூரிகளில் உரையாடவும் இவரை அழைக்கின்றனர்.
சவால்களை எதிர்கொள்வது எப்படி என்று....!இவரும் ஒரு வீராங்கனை தானே...!👍